For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் தனிப்பட்ட மனிதர் அல்ல, சகாப்தம்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெரியார் என்பவர் தனிப்பட்ட மனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம், சகாப்தம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

பெரியார் ஈ.வெ. ராமசாமி- நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் 'பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்ற பெயரில் 20 நூல்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நூல் தொகுப்பை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

திராவிட இயக்கம் இன்று நேற்றல்ல. என்றைக்கு நீதிக்கட்சி என்ற பெயரிலே, தொண்டாற்ற, மக்கள் பணியாற்ற, பார்ப்பனர் அல்லாத மக்களுடைய உரிமைகளுக்காக போராட முன்வந்ததோ அன்று முதல் இன்று வரை இந்த இயக்கத்தை தலையெடுக்க விடாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கூடவே இருந்து குழி பறிக்கின்ற காரியங்கள் பல நடைபெற்றாலும், அனைத்தையும் மீறி இன்றைக்கு திராவிட இயக்கத்தின் தாக்கம் தமிழகத்தில், தமிழகத்தை தாண்டி தென்னக பகுதிகளில், தென்னகத்தை தாண்டி வட இந்திய பூமியில், அதையும் தாண்டி உலகத்தில் கொடி கட்டிப் பறக்கின்ற காலத்தில் நாம் வாழ்வது தந்தை பெரியாருடைய எண்ணங்களை, அறிஞர் அண்ணாவின் கருத்துக்களை செயலாக்க அவற்றுக்கு வடிவம் கொடுக்க என்பதை மறந்துவிடாமல் இன்றும் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆனைமுத்து அவர்கள் தந்தை பெரியாரின் போதனைகளை, கருத்துக்களை அறிவுரையை எல்லாம் நூலாக தொகுத்து வழங்கியுள்ளார். அவர் இன்று வழங்கப்பட்டிருக்கிற 20 புத்தகங்களை ஒரு பெட்டியிலே வைத்து இங்கே அளித்தார். இன்னும் பெரியாரின் மற்ற கருத்துக்களை, எண்ணங்களை திரட்டி இங்கு வழங்க வேண்டும் என்றால், ஒரு பெட்டி போதாது. ஒரு பீரோவில் வைத்துத்தான் அவற்றை கொடுக்க வேண்டும்.

அந்த அளவுக்கு கருத்துக்கள், அந்த அளவுக்கு பகுத்தறிவு உரைகள், அந்த அளவுக்கு லட்சிய சிந்தனைகள் உள்ளடக்கியவை பெரியாரின் நூல்கள், பெரியாரின் சிந்தனைகள். அவற்றை விட்டால் வேறு வழியில்லை இன்றைய மக்களுக்கு.

பெரியார் என்று சொல்வது தனிப்பட்ட மனிதனை அல்ல. அவர் ஒரு இயக்கம், சகாப்தம். அவர் வகுத்த நெறி இன்று மாத்திரமல்ல என்றென்றைக்கும் தமிழனுக்கு, திராவிடர்களுக்கு பயன்படக்கூடிய, திராவிடர்களை ஒன்றுபடுத்தக்கூடிய, திராவிடர்களை அடையாளம் காட்டக் கூடியவை ஆகும்.

அவர் 50 ஆண்டுக்கு முன்பே தொடங்கிய பகுத்தறிவு எப்படியெல்லாம் பரவிற்று என்பதற்கு சான்று. இன்று தொலைக்காட்சியில் கலைவாணர் வரலாறு பற்றிய குறும்படத்தை பார்த்தேன்.

50 ஆண்டுக்கு முன் நான் எழுதிய மணமகள் படத்தில் கலைவாணர் நடித்த சில காட்சிகளை காட்டினார்கள். அதில், கலைவாணர் ஒரு பள்ளியில் ஆசிரியர். அங்கு சின்னஞ்சிறு மாணவர்கள் படிக்கிறார்கள். விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களை பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்பார். அதற்கு, ஒரு பையன் எப்போதுமே அந்த பள்ளியில் துறுதுறுப்பாக பரபரப்பாக முரட்டுத்தனமாக இருக்கும் பையன். அப்போதே அந்த பையனுக்கு நான் அழகிரி என்று பெயரிட்டிருக்கிறேன். அது எனக்கு மறந்துவிட்டது. இன்றைக்கு கலைவாணர் படத்தை பார்க்கும்போதுதான் ஓஹோ அப்போதே பெயர் வைத்தோமா என்று எண்ணிக் கொண்டேன்.

அதில், என்ன காட்சி என்றால், எவ்வளவு அற்புதமாக, சுலபமாக நமது கருத்துக்களை, பெரியார் எண்ணங்களை மக்களுக்கு கலைவாணர்கள், கலைஞர்கள், கலை விற்பன்னர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்கு சான்று.

நான் என்ன செய்ய?' என்று அந்த மாணவன் கேட்பார். கலைவாணரோ ஆத்திரத்தில், தீயை வை' என்பார். அந்த பையன் கேட்பான் எங்கே வைக்கிறது. ஆத்திரத்தில் கோபத்தில் தலையில் தீயை வை என்பார். அவன், தலையில் சூடத்தை வைத்து நெருப்பை வைத்து விடுவான். அது வாத்தியாருக்கு தெரியாது. தலையில் டர்பன் கட்டியிருப்பார். அப்போது அங்கு வருவோரெல்லாம் அய்யோ' என்று ஓடுவார்கள். தலையில் நெருப்பு, நெருப்பு' என்று கூறிக் கொண்டே ஓடுவார்கள். அப்போதுதான் தன் தலையில் சிறுவன் நெருப்பு வைத்துவிட்டான் என்பது கலைவாணருக்கு தெரியவரும்.

அவர் சொல்வார், எதையெதை சிறுவயது குழந்தைகளிடம் பேசுவது என்று தெரிந்து பேசவேண்டும். சிறுபிள்ளைக்கு தலையில் தீவைத்தால் சுடும் என்று தெரியுமா? என்று கூறுவார்.

கலைவாணர் போன்றோர் இதுபோன்ற கருத்துக்களை சொல்வதற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். இப்படி சிந்தனைகளை, விருந்தாக ஏன் எதற்காக என்ற கேள்விகளை எழுப்பும் நிலைக்கு ஆளாக்கக்கூடிய வகையில் அந்த காலத்தில் 50 ஆண்டுக்கு முன்பு கலைவாணர் இதுபோன்ற காட்சி அமைவதற்கு காரணம் பெரியாருடைய தாக்கம்.

அந்தப் படத்தை அடுத்த படத்தில் திமுக என்ற வாசகம் அமைத்து ஒரு பாடலை கலைவாணர் பாடினார். திமுக என்பது திராவிட முன்னேற்ற கழகம். அப்படி சொல்லக்கூடாது என்று சென்சாரில் சொன்னார்கள். அதற்கு, திமுக என்றால் திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று விளக்கம் சொன்னார். அதுபோல், பெரியார்' என்றும் அதில் பாடலை பாடி முடிப்பார். அது வள்ளுவ பெரியார்' என்று விளக்கம் சொன்னார்.

அண்ணன்மார்களுக்கு தம்பி போல என்றும், தம்பிகளுக்கு அண்ணா' போல் என்றும் அண்ணாவை பற்றியும் அதில் சொல்லியிருப்பார்.

திராவிட இயக்கம் வலுவான இயக்கம். அந்த இயக்கத்திலே எந்த ஒரு பிளவு ஏற்பட்டாலும், அப்படி ஏற்பட்ட அந்த பிளவு அந்த இயக்கத்தினை பெரிதும் வளர்க்க இதுவரை பயன்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறல்ல. திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் பிரிந்தது. அப்போது, நான் கண்டபடி திட்டியிருக்கிறேன் என்று ஆனைமுத்து சொன்னார். திட்டியதையெல்லாம் பொறுத்துக்கொண்டதால்தான் இன்று வாழ்த்துகிறார்கள்.

நாங்கள் வாழ்க வசவாளர்கள் என்று சொன்னபோது நீங்கள் திட்டிக் கொண்டிருந்தீர்கள். இப்போது நீங்களே வாழ்க என்று சொல்கிறீர்கள்.

திராவிட இயக்கத்தில் இன்றைக்கு ஆனைமுத்து இந்த புத்தகத்தை வெளியிடுகிறார் என்றால், வீரமணியும் சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த பாசறைகள் பல என்றாலும், அண்ணா சொன்னதை போல் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இருந்தாலும், குறி தவறாமல் யாரை வீழ்த்த வேண்டுமோ அவர்களை வீழ்த்த, இந்த இயக்கம் என்றும் துவளாது. துவண்டுபோகாது என்று நான் உறுதியாக சொல்ல காரணம், 30 ஆண்டுக்கு முன்பு இதே புத்தகத்தின் முதல் தொகுப்பை வெளியிட்டபோது இந்த மண்டபத்தில் பாதியளவு மக்கள் கூட இல்லை. இப்போதோ இந்த மண்டபம் நிரம்பி வழிகிறது. இது பெரியாரின் கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் தமிழர்களிடம் கிடைக்கும் ஆதரவு மேலும் மேலும் பெருகி வருகிறது என்பதற்கு அடையாளம் என்றார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X