12ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு-27ல் விடைத்தாள் திருத்தம்
நெல்லை: தமிழகத்தில் பிளஸ்டூ பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் இந்த தேர்வுகளை எழுதிவந்தனர்.
இன்றுடன் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் முடிவு பெற்றன. விடைத்தாள்கள் மாவட்டம்தோறும் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் கல்வி அலுவலர்கள் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து,
விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
மாற்று எண் இடப்படாத விடைத்தாள்களான தமிழ், ஆங்கிலம், மலையாளம், அரசியல் அறிவியல், கணிப்பொறி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு திருத்தும் பணி முதலில் தொடங்குகிறது.
முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். உதவி தேர்வாளர்கள் வருகிற 29ம் தேதி முதல் ஈடுபடுகின்றனர்.
மாற்று எண் இடப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், கணக்கு பதிவியல் போன்ற பாடங்களுக்கு முதன்மை தேர்வாளர்கள் கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஏப்ரல் 3ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியை துவக்குகின்றனர்.
மாற்று இடப்பட்ட விடைத்தாள்களுக்கு உதவி தேர்வாளர்கள் வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.