இந்தியாவில் பிறந்த டாக்சி டிரைவர் மீது நியூசிலாந்தில் தாக்குதல்
ஆக்லாந்து: இந்தியாவில் பிறந்த டாக்சி டிரைவர், நியூசிலாந்தில் ஒரு பயணியால் தாக்கப்பட்டார்.
ஆக்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இதே நகரில் இந்திய டாக்சி டிரைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
தாக்கப்பட்ட அந்த டிரைவரின் பெயர் மொஹீந்தர் சிங். ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடந்ததது. சிகிச்சைக்குப் பின்னர் தற்போது சிங் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் இன்னொரு இந்திய டாக்சி டிரைவரை ஒரு பயணி மிரட்டிய சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த ஜனவரி 31ம் தேதிதான் டாக்சி டிரைவர் ஹிரன் மோஹினி (39) என்பவர் ஒரு பயணியால் குத்திக் கொல்லப்பட்டார்.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நியூசிலாந்திலும் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்தியர்களைக் கவலைக்குள்ளாகியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவ்தேஜ் சிங் என்ற மதுக் கடை உரிமையாளர் நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு ஜஸ்மத்பாய் படேல் என்பவர் சாலையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.