எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகாததற்கு மோடி விளக்கம்
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு நான் ஆஜராவதிலிருந்து தப்பி ஓட முயலவில்லை. எனக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு நிச்சயம் நான் பதிலளிப்பேன் ஆனால் மார்ச் 21ம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் என எனக்கு சம்மன் தரப்படவில்லை என்று கூறியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
குஜராத்தில் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. அப்போது அகமதாப்த நகரில் உள்ள குர்பர்க் சொசைட்டியில், ஒரு கும்பல் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மோடிக்குத் தொடர்புள்ளது. அவரை விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இந்தக் குழு விசாரணை நடத்தியது. பின்னர் மோடியையும் நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்த எஸ்.ஐ.டி. மார்ச் 21ம் தேதி விளக்கம் தருமாறு மோடிக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை மோடி செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மோடி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் குஜராத் மக்களுக்கு அவர் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் மோடி கூறியிருப்பதாவது...
நான் எஸ்.டி.ஐயின் கேள்விகளுக்குப் பதிலளிப்பேன். சட்டத்தை முழுமையாக மதிப்பேன். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு எஸ்.ஐ.டி. எனவே அதற்குரிய கெளரவத்தையும், மரியாதையையும் நான் அளிப்பேன்.
ஆனால் சில விஷமிகள், உள்நோக்கம் கொண்ட தீய சக்திகள், மார்ச் 21ம் தேதியன்று நான் எஸ்.டி.ஐ. முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் மக்களைக் குழப்பவும், திசை திருப்பவும் முயலுகின்றனர்.
மார்ச் 21ம் தேதி நான் ஆஜராக வேண்டும் என்று அவர்கள் கூறுவது கற்பனையான, அவதூறான பிரசாராமாகும். அப்படி எனக்கு எந்த சம்மனிலும் கூறப்படவில்லை.
எஸ்.ஐ.டியை நான் மதிக்கவில்லை என்று மக்கள் மத்தியில் எனக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்.
இப்படிப் பேசுபவர்கள், எனக்கு சம்மன் அனுப்பிய எஸ்.ஐ.டி உறுப்பினர்கள் முதலில் ஊரில் (குஜராத்தில்) இருந்தார்களா என்பதை உறுதிப்படுத்தி விட்டு குறை கூறியிருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட துவேஷமான பொய்த் தகவல்களை பரப்புவது யார் என்பது விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
கடந்த எட்டு ஆண்டுகளாக எனக்கு அவப் பெயரை ஏற்படுத்த பல வகையான பிரசாரங்களை சிலர் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.
குஜராத்தின் பெருமையைக் காப்பதில் என்னை விட அக்கறை மிகுந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதற்கு களங்கம் விளைவிக்க முயல்வோரின் முயற்சிகளை பலிக்க விட மாட்டேன்.
குஜராத்துக்கும், எனக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அது நிச்சயம் பலிக்காது என்றார் மோடி.