விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் கிடைக்கும்: மின்வாரியம்
சென்னை: விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படவில்லை என்று தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
'தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்கவும், நஷ்டத்தை ஈடுகட்டவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக கிறது என பரப்பப்பட்டு வரும் செய்தி வெறும் வதந்தியாகும்.
இந்த வதந்திகளை மறுக்கும் வகையில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம் ஏதும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இல்லை என்று மின்சார வாரிய ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, மின்சார வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் கட்டணம் மாற்றம் பற்றி கொடுத்துள்ள விண்ணப்பத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும்படி கேட்டுக் கொள்ளவில்லை.
இதனால் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர்களுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.