சென்னையில் நீச்சல் குளத்தில் மாணவன் பலி - பயிற்சியாளர் கைது
சென்னை: நகராட்சி பூங்கா நீச்சல் குளத்தில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். மாணவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் நீச்சல் குள பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த மணலியைச் சேர்ந்தவர் சேகர் மண்பாண்ட தொழிலாளி. இவரது மகன் சரத்குமார் (14) திருவொற்றியூர் காவடிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.
சரத்குமார் நேற்று மாலை 3 மணியளவில் தனது தாய் ருக்மணி தங்கை நித்யஸ்ரீ ஆகியோருடன் நகராட்சி பூங்காவிற்கு சென்றார். சரத்குமார் மட்டும் குளிப்பதற்காக நீச்சல் குளத்திற்கு சென்றான்.
அவனது தாயார் திருவள்ளுவர் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி மாலை 4மணிக்கு நீச்சல் குளத்திற்கு வந்து பார்த்தார். அங்கு சரத்குமாரை காணவில்லை.
அங்கிருந்த நீச்சல் குள பயிற்சியாளர் சின்னாவிடம் இது பற்றி கேட்டபோது, சரத்குமார் குளித்து விட்டு வெளியில் சென்று விட்டதாக கூறினார்.
ஆனாலும் சந்தேகப்பட்டு தேடிய போது சரத்குமார் நீச்சல் குளத்திலேயே மூழ்கி இறந்த நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பயிற்சியாளர் கண்காணிக்காமல் இருந்ததால் தான் எனது மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்ததாக திருவொற்றியூர் போலீசில் ருக்மணி புகார் செய்தார்.
நீச்சல் குளபயிற்சியாளர் சின்னா, ஒப்பந்ததாரர் வெங்கட் ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.