தமிழகத்துக்குள் நக்சலைட்டுகள் ஊடுருவும் அபாயம்- எல்லையில் உஷார்!
நகரி: மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் ஆந்திர எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் நக்சலைட் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் பார்வை தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் மீதும் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதற்காக அவர்கள் தமிழகத்தில் வீரப்பன் பதுங்கி இருந்த சத்தியமங்கலம் வனப்பகுதியை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தமிழக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்க இம்மூன்று மாநில போலீசாரும் இணைந்து ரோந்து சுற்றி வருகிறார்கள்.
ஆந்திராவில் உள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் குப்பம் வழியாக தமிழக பகுதிகளுக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள கிராம பகுதிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் கிராம மக்களிடம் சந்தேகத்திற்கிடமான புதிய நபர்கள் யாராவது வந்தால் உடனே தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். எல்லை பகுதியில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.