வன்னியர் ஆதரவு: திமுகவுக்கு 44.5%-பாமகவுக்கு 27.6%
பென்னாகரம் இடைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை லயோலா கல்லூரி மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் மாதம் என இரண்டு கட்டமாக சர்வே எடுக்கப்பட்டது.
அதில் வன்னியர் ஓட்டுக்கள் யாருக்கு...? என்பது குறித்து நடத்தப்பட்ட சர்வே விவரம்:
இதேபோல பென்னாகரம் தொகுதியில் உள்ள வன்னிய வாக்காளர்களில் 44.5 சதவீதம் பேர் திமுகவுக்கே வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
பென்னாகரத்தில் மொத்தம் 71 சதவீத வன்னியர்கள் ஓட்டுகள் உள்ளன. இதில் திமுகவுக்கு ஆதரவாக 44.5% பேரும், பாமகவுக்கு ஆதரவாக 27.6% பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 15.7% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிகவுக்கு 2.3 சதவீத வன்னியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுகவுக்கு எதிராக பாமகவின் 'அண்ணா' அம்பு!:
இதற்கிடையே திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக கூறும் பாமக, இதைக் கண்டிக்கும் வகையில் நூதன பிரசாரத்தை மேற்கொண்டது.
பாமகவின் மக்கள் டிவியில்தான் இந்த வித்தியாசமான நிகழ்ச்சி இடம் பெற்றது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதையும், அப்படிக் கொடுக்கப்படும் பணத்தால் ஜனநாயகம் சீர்கேடு அடையும் என்றும் அதில் பேசியவர் மக்களுக்கு அறிவுரை கூறினார்.
அப்படி அறிவுரை கூறியவர் வேறு யாருமல்ல, திமுகவை நிறுவியவரான பேரறிஞர் அண்ணாவேதான்.
மக்கள் டிவியில் நேற்று இரவு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி குறித்த விவரம்...
1962ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடேச முதலியார் என்பவர் போட்டியிட்டார்.
அண்ணாவைத் தோற்கடிக்கவும், அவரது செல்வாக்கைத் தகர்த்து வெற்றி பெறவும், அப்போது காங்கிரஸ்காரர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தனராம்.
அதாவது ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 5 பணத்தைக் கொடுத்து, வெங்கடாஜலபதியின் படத்தின் மீது கையை வைத்து காங்கிரஸுக்கே வாக்களிப்போம் என சத்தியமும் பெற்றனராம் காங்கிரஸார்.
இதை சுட்டிக் காட்டி பிரசாரக் கூட்டத்தில் அண்ணா பேசுகையில், வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து என்னைத் தோற்கடிக்க பார்க்கிறது காங்கிரஸ். அதுவும் வெங்கடேச பெருமாளின் படத்தில் சத்தியம் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பணம் பாவப் பணம். இதை மக்கள் பெறக் கூடாது. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு உங்களால் எவ்வளவு நாளுக்கு வாழ்ந்து விட முடியும். இரண்டு நாட்கள் வயிறார சாப்பிடலாம். பின்னர் எனது முகத்தை நீங்கள் பார்த்துதானே ஆக வேண்டும். அப்போது உங்களுக்கு மனது உறுத்தாதா.
எனவே இப்படி பணம் கொடுப்போரிடமிருந்து அதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அப்படிச் செய்வதால் இந்த நாடு சீரழியும், ஜனநாயகம் அழிந்து போய் விடும்.
அப்படியே பணம் வாங்கியிருந்தாலும் அதை என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள். அதை நான் வெங்கடேச பெருமாளிடமே போய்ச் சேர்த்து விடுகிறேன். அந்தப் பணம் எனக்கும் வேண்டாம் என்று கூறினார் அண்ணா.
அண்ணாவின் அந்தப் பேச்சு இந்தக் கால கட்டத்திற்கும் மிகப் பொருத்தமாக இருப்பதுதான் ஆச்சரியமானதாக உள்ளது.
அண்ணாவின் இந்தப் பேச்சையே, பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு அறிவுரை கூறுவது போல பயன்படுத்தி மக்கள் டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சி நிச்சயம் அனைவரையும் கவர்ந்திருக்கும் என நம்பலாம்.
அண்ணா பேசிய இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதியும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.