திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதோ, செக்ஸ் வைத்துக் கொள்வதோ குற்றமல்ல: குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோ
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து நடிகை குஷ்பு, கடந்த 2005ம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார்.
அவரது கருத்துக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன.
இந்த 22 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கடந்த 2008ம் ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு அப்பீல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் மனுதாரர்களின் வழக்கறிஞர் வாதிடுகையில், நடிகை குஷ்புவின் கருத்தால் இளைய சமுதாயம் கெட்டுப்போய் விடும் என்றும், நாட்டின் பண்பாடும், கலாசாரமும் வீழ்ச்சி அடைந்து விடும் என்றார்.
அப்போது, அந்த வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் விவரம்:
திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றமல்ல. அவற்றை தடை செய்ய சட்டத்தில் இடமே இல்லை. இந்த செயல்கள் எந்த விதிப்படி குற்றம் என்று நீங்கள் சொல்லத் தயாரா?
வயது வந்த இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், அதில் என்ன தவறு? அது குற்றமா?. சேர்ந்து வாழ்வது குற்றமல்ல. புராணங்கள் சொல்வதன்படி, பகவான் கிருஷ்ணரும், ராதையும் கூட சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்பது வாழும் உரிமை'. வாழும் உரிமையையும், சுதந்திரத்தையும் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு கூறுகிறது.
நடிகை குஷ்பு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அது உங்களை எப்படி பாதித்தது? எப்படி உங்களுக்கு கவலை ஏற்படுத்தியது? தனிப்பட்ட முறையில் தெரிவித்த அந்த கருத்து, எப்படி குற்றம் ஆகும்? எந்த சட்டவிதியின்படி குற்றம் என்று விளக்குங்கள் பார்பபோம்.
குஷ்புவின் கருத்துகள் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று வாதிடுகிறீர்களே, அதன்படி இந்த பேட்டியைப் படித்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்ணையோ பிள்ளையையோ உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?
குஷ்புவின் பேட்டிக்கு பிறகு, அதனால் எத்தனை இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடினார்கள் என்று ஆதாரம் காண்பிக்க தயாரா? எத்தனை குடும்பங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன என்று விளக்கத் தயாரா?.
திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அவர்கள் முறைகேடான செயலில்தான் ஈடுபடுவார்கள் என்ற அனுமானத்தில் எப்படி நாம் இறங்க முடியும்?.
ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்று குஷ்பு சொன்னது எந்த சட்டப்படி குற்றம் என்று உங்களால் கூற முடியுமா?.
இவ்வாறு சரமாரியாக கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், புகார்தாரருக்கு மகள்கள் இருக்கிறார்களா? என்று கேட்டனர். அதற்கு இல்லை' என்று வழக்கறிஞர் பதில் கூறவே, பிறகு எப்படி அவர் பாதிக்கப்பட்டார்? என்று கேட்ட நீதிபதிகள் தொடர்ந்து,
நடிகை குஷ்பு தெரிவித்தது அவருடைய சொந்தக் கருத்து. அது எப்படி உங்களை பாதிக்கிறது? அவர் பேசியது எங்களை பாதிக்கவில்லை என்றனர்.
பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.