மீனாட்சி அம்மன் கோவிலில் முதல் முறையாக லஞ்ச ரெய்டு - ஒருவர் கைது
மதுரை: மதுரையில் உள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றிலேயே முதல் முறையாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் ரெய்டு நடந்துள்ளது. இதில் 59 வயதான ஊழியர் சிக்கினார்.
அவரது பெயர் அய்யம்பெருமாள். 59 வயதாகும் இவர் கோவில் நிர்வாக அதிகாரியின் நேர்முக உதவியாளராக இருக்கிறார்.
மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(55). மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களுக்கு, 1981ம் ஆண்டு முதல் மாலைகள் கட்டிக் கொடுக்கும் பணியை செய்கிறார். இதற்குரிய பூக்களை வாங்கித் தந்த கோவில் நிர்வாகம், சில ஆண்டுகளுக்கு முன், நீங்களே பூக்களை வாங்கி மாலையாக கட்டிக் கொடுங்கள்; அதற்குரிய தொகையை பின்னர் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தது.
ஆனால், 2008ல் இரு பில்கள், 2009ல் எட்டு பில்கள், இந்தாண்டு 11 பில்களுக்குரிய, ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 660 ரூபாயை பாலசுப்பிரமணியத்திற்கு, கோவில் நிர்வாகம் தராமல் இருந்து வந்தது.
மேலும், சமீபத்தில் நடந்த விழாக்களுக்குரிய மூன்று பில்களுக்குரிய 24 ஆயிரத்து 680 ரூபாயும் தரவில்லை. நிலுவைத் தொகையைக் கேட்டு விண்ணப்பித்த பாலசுப்பிரமணியத்தை, கோவில் நிர்வாக அதிகாரியின் நேர்முக உதவியாளர் அய்யம்பெருமாள் அணுகினார்.
பில்களுக்குரிய முழுத்தொகையையும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். அதில் 20 சதவீதம் லஞ்சம் தரவேண்டும் என்றார்.
அதிர்ச்சி அடைந்த பாலசுப்ரமணியம், இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., குலோத்துங்கனிடம், புகார் செய்தார். இதையடுத்து நேற்று மாலை கோவில் நிர்வாக அலுவலகத்தில் வைத்து முதல் தவணையாக 3,000 ரூபாய் பணத்தை பாலசுப்ரமணியத்திடமிருந்து அய்யம் பெருமாள் பெற்றபோது அவரை கையும் களவுமாக போலீஸார் பிடித்துக் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். கோவிலுக்கு சொந்தமான பிர்லா மந்திரில் தங்கியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு நடந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதனால் இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.