நுகர்வோர் நீதிமன்றத்தில் 8,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன
மதுரை: தமிழகத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் சுமார் 8 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் நுகர்வோர் நீதிமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை நுகர்வோர் ஆணைய தலைவர் தணிகாசலம் பார்வையிட்டார். அதன் பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
'தமிழகத்தில் 35 நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. இதில் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு உட்பட ஐந்து மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு மட்டுமே கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மற்ற மாவட்டங்களில் கட்டட வசதி, கழிவறை வசதி கூட இல்லை. இதனால், நுகர்வோர் நீதி மன்றத்தின் தலைவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மதுரையில் நுகர்வோர் சர்க்கியூட் பெஞ்ச் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு, மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும், மாநில அளவில் 35 நுகர்வோர் நீதி மன்றங்களில் சுமார் 8,000 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவற்றை விரைந்து பைசல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என்றார்.