12,000 விவசாயிகளுடன் பெப்ஸி ஒப்பந்தம்!
கொல்கத்தா: லேஸ், அங்கிஸ் சிப்ஸ் போன்ற தங்களின் தயாரிப்புகள் சந்தையில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து உருளைக்கிழங்கு விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பெப்ஸிகோ நிறுவனம்.
இதற்கென நாடு முழுவதும் 16000 ஏக்கர் பரப்பளவில், 12000 விவசாயிகளிடம் ஒப்பந்த முறை விவசாயம் நடத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இத்தகவலை பெப்ஸிகோ ஹோஸ்டிங்ஸ் (வேளாண்மை வர்த்தகம்) நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் நிஸ்சிந்த் பாட்டியா தெரிவித்துள்ளார்.
இந்த 12000 விவசாயிகளில் 6500 பேர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். 2600 ஏக்கர் இவர்கள் வசமுள்ளது.
கடந்த சீஸனில் மட்டும் 22000 டன் உருளைக் கிழங்கை பெப்ஸிகோ ஒப்பந்த முறை விவசாயிகள் விளைவித்துள்ளனர். இந்த விளைச்சல் அடுத்த பருவத்தில் இரட்டிப்பாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாட்டியா.
இப்போதைக்கு உருளைக்கிழங்கு மட்டும் இந்த ஒப்பந்த முறை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டாலும், விரைவில் ஓட்ஸ் போன்ற பிற வகை தானியங்களும் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
விவசாயிகளிடம் உருளைக் கிழங்கு கிலோ ரூ 6 என வாங்குகிறது பெப்ஸிகோ. 'நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச கொள்முதல் விலை' என்கிறார் பாட்டியா.