பென்னாகரத்தில் நாளை பிரசாரம் ஓய்கிறது!
பென்னாகரம்: பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 24 மணி நேரமே உள்ளதால் அங்கு பிரசாரம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு விறுவிறுப்பான பிரசாரம் நடந்து வருகிறது.
பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து அங்கு தற்போது படு சூடான பிரசாரம் நடந்து வருகிறது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியிலேயே முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2 நாள் பிரசாரம் மேற்கொண்டார்.
பாமக தரப்பில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் தொடர்ந்து அங்கேயே சுற்றி வந்து பிரசாரத்தை முடுக்கி விட்டு வருகின்றனர்.
முதல்வர் கருணாநிதி இன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
பிரசாரம் கடைசிக் கட்டத்தை நெருங்கி விட்டதால் பென்னாகரம் தொகுதி முழுவதும் அரசியல் சூடு அதி வேகமாக பரவிக் கிடக்கிறது.
ஒகனேக்கலில் குவிந்த அரசியல் கட்சியினர்:
பென்னாகரம் இடைத் தேர்தலையொட்டி ஒகனேக்கல் அருவியில் நாளை முதல் மூன்று நாட்களுக்குக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன்றே அங்கு பெரும் திரளான கட்சியினர் படையெடுத்ததால் ஒகனேக்கலில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தேர்தலையொட்டி பென்னாகரம் தொகுதியில் வெளியூர்வாசிகள் நாளை மாலைக்குள் வெளியேறி விட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒகனேக்கல் அருவிக்கக் கூட வெளியூர்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் போகக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பென்னாகரம் தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இன்றே ஒகனேக்கலில் குவிந்து விட்டனர். இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஓகனேக்கலில் வெளியூர் அரசியல் கட்சியினர் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மதுபான கடைகளை மூடல்:
இடைத்தேர்தலையொட்டி நாளை மாலை 5 மணி முதல், 27ம் தேதி வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 30ம் தேதியும் இந்தத் தொகுதியிலும் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.