மும்பை கடல் பால பாதைத் திறப்பு விழாவில் அமிதாப் - சோனியா கடும் கோபம்- மீடியா மீது அமிதாப் பாய்ச்சல்
பிரச்சினைகளைத் தேடித் தேடி அவை உருவாக்கி வருவதாகவும் அமிதாப் பச்சன் கடுமையாக கூறியுள்ளார்.
மும்பையில் பந்த்ரா- ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் பாலம் தற்போது போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக நான்கு வழிப் பாதை திறக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடந்த விழாவில் அமிதாப் பச்சனும் கலந்து கொண்டார். இது காங்கிரஸ் வட்டாரத்தை குறிப்பாக சோனியா காந்தியை பெரும் எரிச்சலில் ஆழ்த்தியுள்ளதாம்.
அமிதாப் பச்சனுக்கும், ராஜீவ் குடும்பத்துக்கும் இருந்து வந்த நெருக்கமான நட்பு உலகம் அறிந்தது. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவினையும், கடும் துவேஷத்துடன் சோனியா காந்தி குடும்பத்தினர் செயல்படுவதும் கூட உலகம் அறிந்த ஒன்றுதான்.
மேலும் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநிலத்தின் பிராண்ட் அம்பாசடராகவும் இருக்கிறார் அமிதாப் பச்சன். அவரே இந்தப் பொறுப்பை விருப்பப்பட்டு வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியையும் அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் அரசு நடத்திய விழாவுக்கு அமிதாப் பச்சன் அழைக்கப்பட்டதால் செம காட்டமாகி விட்டாராம் சோனியா காந்தி. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு முதல்வர் அசோக் சவான், மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியா காந்தி நோட்டீஸையும் அனுப்பியுள்ளார்.
ஆனால் உண்மையில் அமிதாப் பச்சனை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அழைக்கவில்லையாம். மாறாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர்தான் அமிதாப்பை அழைத்து வந்துள்ளனராம்.
இதுகுறித்து சவான் கூறுகையில், அது ஒரு அரசு விழா. அழைப்பிதழ்கள் அனுப்பியதில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இன்னும் சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றார்.
மும்பை கடல் பாலத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மகாராஷ்டிர சாலை வளர்ச்சிக் கழகம்தான் வைத்துள்ளது. இதன் தலைவராக இருக்கும் அமைச்சர் ஜெய்ததத் ஷிர்சாகர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் கூறுகையில், அமிதாப் பச்சன் ஒரு மாபெரும் நடிகர். அவரை அழைத்தது எப்படித் தவறாகும். காங்கிரஸ்காரர்கள் ஏன் இவ்வளவு கொந்தளிக்கிறார்கள்.
மகாராஷ்டிராவின் மிக முக்கிய, மிகப் பெரிய அடையாளங்களாக உள்ளவர்கள் அமிதாப் பச்சனும், சச்சின் டெண்டுல்கரும். அப்படிப்பட்ட அமிதாப் பச்சனை இதுபோன்ற பிரமாண்ட விழாவுக்கு அழைப்பதில் ஒரு தவறும் இல்லை என்றார்.
மீடியா மீது அமிதாப் பாய்ச்சல்...
இதற்கிடையே, இந்தப் பிரச்சினைக்கு மீடியா மீது பாய்ந்துள்ளார் அமிதாப் பச்சன். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மீடியாக்கள் விதைத்த பிரச்சினை. அவர்கள்தான் இதை உருவாக்கி விட்டனர்.
நான் எதில் பங்கு பெற்றாலும் அதைப் பிரச்சினையாக்கி வருகிறார்கள். தொடர்ந்து மீடியா என்னைத் துரத்தி வருகிறது என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
எல்லாம் சரி, அமிதாப் பச்சனை ஒரு அரசு விழாவுக்கு அழைத்து அவ்வளவு பெரிய குற்றமாக காங்கிரஸ் கருதுவது நியாயம்தானா...?