'வெளிநாட்டு பல்கலைகளால் எந்த நன்மையும் இல்லை'-திருவாசகம்
சென்னை: வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வருகையால் இந்தியாவுக்கு பெரிய பலன் ஒன்றும் இல்லை என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் க.திருவாசகம் கூறியுள்ளார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் 600 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் பட்டமளித்த சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம், பின்னர் பேசியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் போன்றோருக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததில் பச்சையப்ப முதலியார், அழகப்பச் செட்டியார் போன்றோரின் பங்கு மிகவும் பெரிது.
நாட்டில் இப்போது பிளஸ் 2 முடிப்போரில் உயர்கல்வி பெறுவோர் 14 சதவீதமாக உள்ளனர். மீதி 86 சதவீதம் பேர் பொருளாதாரா நிலை உள்ளிட்ட காரணங்களால் உயர்கல்விக்கு வர முடியவில்லை.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க, கல்லூரி நிர்வாகங்கள் தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வரவால் இந்தியாவுக்கு பெரிய நன்மை எதுவும் வந்துவிடப் போவதில்லை. அவைகளின் வருகையால் நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைக் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் கூடுதலாக ஏற்படும்.
இதை தவிர மற்ற நன்மைகள் எதுவும் இல்லை.
வருடத்திற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் வெளிநாட்டில் போய் படிக்கிறார்கள். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வந்தால் சில நன்மைகளும், பல தீமைகளும் ஏற்படும். வெளிநாட்டுக்கு போய் படிக்கும் மாணவர்கள் பலர் இந்த பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். அதனால் அவர்களுக்கு செலவு குறையும்.
பெரிய பல்கலைக்கழகங்கள் வராது!
ஆனால் ஹார்வர்டு, கொலம்பியா போன்ற சிறந்த பல்கலைக்கழகங்கள் இங்கு வராது. சாதாரண பல்கலைக்கழகங்கள்தான் வரும். இந்த பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாணவர்கள்தான் படிக்க முடியும். ஏழை மாணவர்களால் இந்த பல்கலைக்கழங்களில் சேர முடியாது.
இடஒதுக்கீட்டை இந்த பல்கலைக்கழங்கள் பின்பற்றுமா? வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மற்றும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நாம் கல்வி வழங்குவதுபோல இந்த பல்கலைக்கழகங்களால் தரமுடியாது என்று நினைக்கிறேன். தரமான கல்வியையும் தரமுடியாது. எந்த வகையிலும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களால் இந்திய மாணவர்களுக்கு நன்மைகளை செய்ய முடியாது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டாய வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பை படிக்க வேண்டும் என்று கொண்டு வந்துள்ளோம்.
டிப்ளமோ படிப்பு முழுவதும் இலவசம். டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றால்தான் பட்டப்படிப்புக்கான பட்டம் வழங்கப்படும். இரண்டும் சேர்ந்துதான் பெற முடியும்.
நமது நாட்டின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இங்குள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத போது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் எப்படி ஏழை மாணவர்கள் நலனில் சிறப்பாகச் செயல்பட முடியும்.
மாணவர்களுக்கான பாடத்திட்டம் தேவை அடிப்படையிலும், மண்டலம் சார்ந்தும் இருக்க வேண்டும் என்றும், பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் சுதந்திரம் வேண்டும் என்றும் கூறி நாடு முழுவதும் பொதுவான பாடத் திட்டம் உருவாக்கப்படுவதை எதிர்க்கும் நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டம் ஒத்து வருமா?
இந்திய உயர்கல்வி வெளிநாடுகளின் உயர்கல்விக்கு கீழானது அல்ல. உயர்கல்வியில் இந்தியா சிறந்தே விளங்குகிறது என்றார்.