வரும் நிதியாண்டில் இலவச கலர் டிவி - புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அடுத்த நிதி ஆண்டில் வழங்கப்படும் என்று முதல்வர் வைத்தியலிங்கம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.
இன்று மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் வைத்திலிங்கம் இன்று காலை 11 மணிக்கு 2010-11ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து விட்டு அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நலத்திட்ட உதவிகளை புதுச்சேரி அரசு செயல்படுத்தவில்லை என்பதால் வெளிநடப்பு செய்வதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தைப் போலவே வரியில்லாத பட்ஜெட்டை முதல்வர் வைத்தியலிங்கம் தாக்கல் செய்தார்.
2010-11ம் நீதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மொத்தம் ரூ. 4,430 கோடி. இதில் திட்ட ஒதுக்கீடு ரூ. 2,500 கோடி, திட்டமில்லா செலவினங்களுக்கு ரூ. 1,906.50 கோடியும், மத்திய அரசு ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு ரூ. 23.50 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் முதல்வர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
வரும் நிதியாண்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதிய தாரர்களுக்கும் 30 விழுக்காடு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், பத்திரிகையாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்த உள்ளதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கரும்பு நாற்றங்கால் ஊக்கத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 1,000ல் இருந்து ரூ. 4,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கரும்பின் விலை, அடுத்த அரைவைப் பருவத்திலிருந்து டன் ஒன்றுக்கு ரூ.2,000 ஆக உயர்த்தப்பட உள்ளது.
விதையிடும் இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம், ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள், நெல் நாற்றுகளை நடும் இயந்திரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு மானிய உதவி அளிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாகி, ஏனாமில் வேளாண் அறிவியல் மையங்கள் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.