விடைத்தாளில் சாதிப் பெயர் எழுத அறிவுறுத்தல்- பீகாரில் சலசலப்பு
பாட்னா: பீகாரில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் சாதியை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் அரசு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. நேற்று மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய போது சுற்றறிக்கை ஒன்று, வினாத்தாளுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டது.
அந்த சுற்றறிக்கையில், மாணவர்கள் தங்களின் சாதிப் பெயரை விடைத்தாளில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும் போது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கொடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக காரணம் கூறப்பட்டது.
இந்த தகவல் வெளியானதும் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில்,
'ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதில் எத்தனை சதவீதம் பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பதை கண்டு பிடிக்கவே இந்த சர்வே நடத்தப்படுகிறது' என்றனர்.
ஆனால் பீகார் மாநில அரசு உயர் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பீகார் மனித வள மேம்பாட்டு மந்திரி ஹரி நாராயணன்சிங் கூறினார்.