பென்னாகரம்: தலைமைச் செயலாளருக்கு ஆணையம் கெடு
இந்த அறிக்கையை இன்று காலை 10 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்களைக் கவர்வதற்காக அவர்களுக்கு மது, பணம், புடவை, வேட்டி போன்ற இலவசங்கள் வழங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் அளித்துள்ளன.
பென்னாகரத்தில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் எதுவும் வழங்கப்பட்டால் அது குறித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் அல்லது தனி நபர்களின் இத்தகைய மோசடி நடவடிக்கைகளை காவல் துறையினர் அடிமட்டத்திலிருந்து தடுத்து நிறுத்த வேண்டும், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து காவல் துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
கூடுதலாக மத்தியப் படைகள்:
தேர்தல் ஆணையம் ஏற்கெனவே 6 கம்பெனிகள் கொண்ட மத்திய பாதுகாப்புப் படையைத் தொகுதிக்கு அனுப்பியுள்ளது. இப்போது கூடுதலாக 3 கம்பெனிகள் சிறப்பு அதிரடிப் படையையும் அனுப்பியுள்ளது.
கூடுதலாக மேலும் ஒரு மத்திய பார்வையாளர்:
இதைத் தவிர, பென்னாகரம் தொகுதியில் ஏற்கெனவே பணி செய்து வரும் தேர்தல் ஆணையத்தின் இரண்டு பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக ஆந்திரத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான நான் தர்மபுரியில் தங்கி, தேர்தல் பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும், காவல் துறையின் பணிகளை மேற்பார்வையிட்டு மது, பணம் உள்ளிட்ட எந்த பொருள்களும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் புகார் குறித்த விவரங்கள் கிடைத்த பிறகு, அவற்றை மதிப்பீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.
இவ்வாறு நரேஷ் குப்தா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இன்று குப்தா தர்மபுரி வருகை:
இந் நிலையில் இடைத்தேர்தலை நேரில் கண்காணிக்க தமிழக நரேஷ் குப்தா மற்றும் 3வது தேர்தல் பார்வையாளரான ஜே.ரேமண்ட் பீட்டர் ஆகியோர் இன்று தர்மபுரி வருகின்றனர்.
இத்தகவலை மாவட்ட ஆட்சியர் அமுதா தெரிவித்தார்.