பாஸ்போர்ட்: காவல்துறை விசாரணையில் மாற்றமில்லை - சசிதரூர்
கோவை: பாஸ்போர்ட் விண்ணப்பம் மீதான காவல்துறை விசாரணையின் கால அவகாசத்தை குறைக்க உள்துறை அமைச்சகம் அனுமதிக்கவில்லை என்று சசிதரூர் கூறியுள்ளார்.
கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் இத்தகவலை தெரிவித்தார்.
கோவையில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் சசி தரூர் கூறியதாவது:
சாதாரண பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தை பரிசீலித்து, வழங்குவதற்கு காவல்துறை விசாரணையில் தான் தாமதம் ஏற்படுகிறது.
இதை எளிமைப்படுத்த வேண்டு்ம் என கோரினோம். ஆனால் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.
காரணம், பாதுகாப்பு காரணங்களுக்காக சிலவற்றை சமரசம் செய்துகொள்ள உள்துறை விரும்பவில்லை.
வடமாநிலத்தில் காவல்துறை விசாரணை முடிந்த பின்பும், பாகிஸ்தானியர் இருவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாதாரண பாஸ்போர்ட் வழங்கும் முறையை எளிமைப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று.
தபால் துறை வழங்கும் அடையாள அட்டையை பாஸ்போர்ட்டுக்கான ஆதார ஆவணமாக ஏற்க முடியாது. இப்போது நடைமுறையில் உள்ள ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விரைவில் வழங்கப்படவுள்ள தேசிய அடையாள அட்டையை, ஆதார ஆவணமாகச் சேர்க்க அமைச்சகம் பரிசீலிக்கும்.
டிசிஎஸ் நிறுவனத்திடம், அவுட் சோர்சிங் முறையில் பாஸ்போர்ட் பணிகளை ஒப்படைக்க பணியாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அமைச்சகம் பரிசீலிக்கும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, நாடு முழுவதும் 77 இடங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.
அதன்படி பெங்களூரு, சண்டிகார் ஆகிய இடங்களில் முன்னோடித் திட்டமாக, இந்த சேவா கேந்திரங்கள் விரைவில் இயங்க உள்ளன.
இவற்றின் செயல்பாடுகள் மற்றும் பலன்களைப் பொருத்து, இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் 75 இடங்களில் இது போன்ற சேவா கேந்திரங்கள் அமைக்கப்படும்.
ஒரு மாநிலத்தின் பரப்பளவு, மக்கள் தொகை இவற்றை கணக்கில் கொள்ளாமல், பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த மையங்கள் அமைக்கப்படும்' என்றார்.
பாகிஸ்தானியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து உரிய முறையில் விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் சசிதரூர் தெரிவித்தார்.