ஆர்டிஓ அலுவலகத்தில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் ரூ.86 ஆயிரம் சிக்கியது
நாகர்கோவில்: நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஓழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது முதல் அனைத்துக்கும் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள வந்தன.
இதையடுத்து நேற்று மதியம் 2 மணி அளவில் குமரி மாவட்ட லஞ்ச ஓழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுந்தராஜன் தலைமையிலான போலீசார் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நின்றிருந்த புரோக்கர் முருகன், விஜயன் ஆகியோரை பிடித்து சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக ரூ.70,000 ரொக்கப்பணம் சிக்கியது.
அவர்களிடம் விசாரித்ததில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாசுக்கும், அவரின் உதவியாளர் மதுசூதனனுக்கும் வழங்க லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
அப்போது பீரோவின் இடையிலும், நாற்காலியின் அடியிலும் ரூ.17,745 ரொக்கப்பணம் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். மொத்தம் ரூ.85,930ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதிகாரி தாஸ், உதவியாளர் மதுசூதனன், மோட்டார் ஆய்வாளர் சிவகுமார் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புரோக்கர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.