கற்பு: சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கருத்தை வாபஸ் பெற ராமகோபாலன் வலியுறுத்தல்!
பெண்கள் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை என்று நடிகை குஷ்பு கடந்த 2005ம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
குஷ்புவின் இந்த கருத்து தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே உச்சநீதிமன்றத்தில் குஷ்பு முறையிட்டார்.
குஷ்புவின் மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணையின் போது திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு தவறில்லை என்ற ரீதியில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் இதுபற்றி குறிப்பிடுகையில்,
'திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் இணைந்து வசிப்பதோ எவ்விதத்திலும் தவறல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக் வர்மா, சௌகான் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை. சமுதாயத்தின் நம்பிக்கை, அதன் சிறப்பு போன்றவற்றை கவனத்தில் கொண்டு இவர்கள் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்.
திருக்குறள் காட்டும் கற்புநெறி, கற்புக்கரசி கண்ணகி போன்ற தமிழகத்தோடு இணைந்துள்ள விஷயங்களை தூக்கி எறியலாமா?
நீதிபதிகளின் கருத்து தேவையற்றது. வேதனையளிக்கிறது. இக்கருத்தை அவர்கள் திரும்ப பெற வேண்டும்' என்று ராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.