சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் - போலீசில் ஒப்படைத்த வாலிபர்கள்!
திருச்செந்தூர்: சாலையில் கிடந்த ரூ. 2 லட்சம் பணத்தை த்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரண்டு வாலிபர்களை போலீசார் பாராட்டினர்.
திருச்செந்தூரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (47). இவர் பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களை தவணை முறையில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார்.
இவர், உடன்குடியில் ஒரு வங்கியில் இருந்து 2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, அதை பையில் போட்டு பைக்கில் திருச்செந்தூர் புறப்பட்டார்.
அப்போது, அந்த பணப்பை வழியில் காணாமல் போய்விட்டது. பல இடங்களில் அந்த பணப்பையை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர் இது குறித்து உடன்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில், சாத்தான்குளம், வாலசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சவுந்தரராஜ் (21), மகாராஜன்(21) ஆகியோர் கீழே கிடந்த பணப்பையை எடுத்து வந்து குலசேகரன்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, அந்த பணம் சோமசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கீழே கிடந்த பணத்தை எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சவுந்தரராஜன், மகாராஜன் ஆகியோரை பேலீசார் பாராட்டினர்.