சொந்தக் கட்சியிலிருந்தே விலகிய உமா பாரதி!: ஆர்எஸ்எஸ் எதிர்ப்பை மீறி பாஜக சேர்க்குமா?
பாஜகவில் முக்கியத் தலைவராக விளங்கியவர் உமா பாரதி. மத்தியப் பிரதேச மாநில முதல்வராகவும் இருந்தார். பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் பாஜகவிலிருந்து கடந்த 2005ம் ஆண்டு நீக்கப்பட்டார். அதன் பின்னர் பாரதிய ஜனசக்தி என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந் நிலையில் தற்போது பாஜகவில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளார் உமா பாரதி. இதன் முதல் கட்டமாக தனது சொந்தக் கட்சியலிருந்தே அவர் விலகி விட்டார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறுமா என்பது தெரியவில்லை.
காரணம், உமா பாரதியின் வருகையை பாஜகவில் ஒரு பிரிவினரே விரும்பவில்லை. மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கூட உமா பாரதியை விரும்பவில்லை.
கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் உமா பாரதி கலந்து கொண்டார். இக்கூட்டத்தல் பாஜக தலைவர் நிதின் கத்காரி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பி வருவதை நிதின் க்க்தாரி வரவேற்றாலும் கூட, குறிப்பாக உமா பாரதியை அவர் வரவேற்றாலும் கூட ம.பி பாஜக தலைவராக சிவராஜ் செளஹான் பதவியேற்றிருப்பது உமா பாரதிக்கு சிக்கலாக அமையும் எனத் தெரிகிறது.
சிறப்பான பிரச்சார பீரங்கியாக உமா பாரதி திகழ்வார் என்று கத்காரி கூறினாலும் கூட உமா பாரதியை கட்சியில் சேர்த்தால் அது பல குழப்பங்களையே ஏற்படுத்தும் என சிவராஜ் செளஹான் தலைமையிலான ம.பி. பாஜக கருதுகிறதாம்.
செளஹான் தவிர மேலும் பல மூத்த பாஜக தலைவர்களும் கூட உமா பாரதியின் வருகையை விரும்பவில்லை. அதை விட முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்ஸும் கூட உமாவின் வருகையை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இத்தனை எதிர்ப்புகளுக்கும் முக்கிய காரணமாகக் கூறப்படுவது உமா பாரதி தன்னை பாஜகவிலேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை முன்னிருத்தியது தான் என்கிறார்கள்.
உமா பாரதியை பகிரங்கமாகவை எதிர்க்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவரும், மத்தியப் பிரதேச மாநில பாஜக விவகாரத்திற்கான பொறுப்பாளருமான சுரேஷ் சோனி. அதேபோல முன்பு உமா பாரதியின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னர் எதிர் முகாமுக்குப் போன மதன் தாஸ் தேவியும் கூட உமா பாரதியின் வருகையை விரும்பவில்லை.
அதேசமயம், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பக்கம் கத்காரி தற்போது தீவிர கவனம் செலுத்த்த் தொடங்கியுள்ளார். முற்பட்ட வகுப்பினருக்கான கட்சி என்ற பெயரை மாற்றும் நோக்கில் இந்த புதிய வேலையில் அவர் இறங்கியுள்ளார். எந்த ஊருக்காவது போனால் தலித் ஒருவரின் வீட்டுக்குப் போவதை அவர் புதிய வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். எனவே உமா பாரதியை இழுப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை கவர முடியும் என அவர் கருதுகிறார்.
உமா பாரதி தவிர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்யாண் சிங்கின் மகன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாபுலால் மராண்டி, ஒரிசாவின் கெர்பலா ஸ்வெய்ன் ஆகியோரையும் முன்னணிக்குக் கொண்டு வந்து கட்சிக்குப் புதிய முகத்தை ஏற்படுத்த கத்காரி முயல்வதாகத் தெரிகிறது.
முன்னதாக கட்சியின் தற்காலிக தலைவர் சங் பிரியா கெளதமுக்கு உமா பாரதி அனுப்பிய விலகல் கடித்த்தில், நாட்டின் அரசியல் நிலை மற்றும் எனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு விலகுவதாக கூறியுள்ளார் உமா பாரதி.