மைக்கில் ஆபாசமாக பேசிய பெண் டிஎஸ்பியை முற்றுகையிட்ட கிராமமக்கள்
இடைத்தேர்தல் நடைபெற உள்ள பென்னாகரம் தொகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் வெளியூர் ஆட்கள் யாராவது தங்கியுள்ளனரா என்று போலீசார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பதட்டத்தை தணிக்கும் வகையில் பொது இடங்களில் கூட்டம் போடாமல் இருக்கவும் போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தினார்கள்.
பென்னாகரம் போலீஸ் டி.எஸ்.பி பஞ்சவர்ணம். போலீசாருடன் ரோந்து சென்றார். கூட்டமாக இருக்கும் மக்களை கலைந்து போகுமாறு பைக்கில் சொன்னார்.
இரவு 9 மணியளவில் கூத்தப்பாடி என்ற கிராமத்துக்கு சென்றார். அப்போது ரோட்டின் ஒரு புறத்தில் பெண்களும், ஆண்களும் உட்கார்ந்து இருந்தனர்.
அப்போது டிஎஸ்பி பஞ்சவர்ணம் ஒலிபெருக்கி மூலம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. டிஎஸ்பியின் பேச்சினால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனத்தையும் முற்றுகையிட்டனர்.
சுமார் 1 ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் டிஎஸ்பி பஞ்சவர்ணத்தை சூழ்ந்து கொண்டதால் அவரால் வெளியே செல்ல முடியவில்லை.
இதையடுத்து அவர் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பென்னாகரம் தேர்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள கோவை காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் கூத்தப்பாடிக்கு விரைந்து வந்தார்.
ஆபாசமாக பேசிய டிஎஸ்பி பஞ்சவர்ணம் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னரே கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.