அமிதாப் பச்சன் என்ன திருடனா, தீவிரவாதியா? - காங்.குக்கு தாக்கரே கண்டனம்
மும்பையில் பாந்த்ரா- ஒர்லி கடல் பாலத்தின் கூடுதல் பாதைகள் திறப்பு விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். இதனால் காங்கிரஸ் கட்சி குறிப்பாக அதன் தலைவர் சோனியா காந்தி படு கடுப்பாகியுள்ளார்.
இந்த சர்ச்சையால் அமிதாப் பச்சன் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர் அழைத்துதான் தான் கலந்து கொண்டதாக தெரிவித்த அவர் இதற்காக என்னை விமர்சிப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இப்போது தாக்கரே நுழைந்துள்ளார். இதுகுறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிக்கையில் எழுதியுள்ள தலையங்கத்தில் காங்கிரஸை சாடியுள்ளார்.
அந்த தலையங்கத்தில், பாந்த்ரா - ஒர்லி கடல் பாலத்தின் 2வது கட்டத் தொடக்க விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டதில் ஒரு தவறும் இல்லை. மாறாக அந்த விழாவுக்கு பெருமைதான் கூடியது.
அமிதாப் பச்சன் எந்த ஒரு குற்றத்தையும் செய்து விடவில்லை. அவர் என்ன திருடனா அல்லது தீவிரவாதியா?, காங்கிரஸார் இப்படி வெறுத்து ஒதுக்குவதற்கு?.
ஒரு தீண்டத்தகாதவரைப் போல அமிதாப் பச்சனை காஙகிரஸ் கட்சி நடத்துவது கண்டனத்துக்குரியது. ஷாருக்கான் பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் நடக்கிறார். ஆனால் அவருக்கு ராஜ மரியாதை கொடுக்கிறது காங்கிரஸ். ஆனால் அமிதாப்பச்சனை மட்டும் வெறுத்து ஒதுக்குகிறது என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
சமீபத்தில்தான் ஷாருக் கானுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தி தோல்வியுடன் ஒதுங்கிக் கொண்டது சிவசேனா. இந்த நிலையில் அடுத்து அமிதாப் பச்சன் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.