பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீண்டும் ஸ்ட்ரைக்!
லண்டன்: தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் நான்கு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமான ஊழியர்கள். இன்று முதல் இந்த போராட்டம் நான்கு நாட்கள் நடக்கிறது.
கடந்த வாரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்துக்கும் ஊழியர்களின் சங்கமான 'யுனைட்'டுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு நிர்வாகம் சாதகமான முடிவைத் தெரிவிக்காத நிலையில் மூன்று நாள்கள் ஸ்ட்ரைக்கை மேற்கொண்டனர் விமான பணியாளர்கள். இத்ல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பெரும் நஷ்டத்துக்குள்ளானது நிர்வாகம்.
இதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு ஸ்ட்ரைக்கை இன்று அறிவித்துள்ளனர் பணியாளர்கள். செவ்வாய்க் கிழமை வரை இந்த ஸ்ட்ரைக் தொடர்கிறது.
இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ் கூறுகையில், "நான்கு நாள் ஸ்ட்ரைக் நடந்தாலும், எங்கள் வாடிக்கையாளர்களில் முக்கால்வாசிப்பேரை அதாவது 180000 பயணிகளுக்கு சேவை செய்ய முடியும் என்று நம்புகிறோம். மீதியுள்ளவர்களுக்கு முடி்தவரை மாற்று விமானங்களை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன.
அதேநேரம் தொழிற்சங்கத்தின் மேற்கொள்ளும் இந்த ஸ்ட்ரைக் முற்றிலும் அநியாயமானது" என்றார்.
"இந்த ஸ்ட்ரைக் மூலம் பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு 149 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டும் (கடந்த முறை நடந்த ஸ்ட்ரைக்கையும் சேர்த்து)... ஆனால் வேறு வழியில்லை" என்று ஊழியர்கள் யூனியன் தெரிவித்துள்ளது.