அங்கீகாரம் ரத்து - சென்னை மீனாட்சி ப்லகலைக்கழக மாணவர்கள் போராட்டம்- வன்முறை
சென்னை: அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து வகுப்பறைகளை மாணவர்கள் அடித்து சூறையாடினர்.
சென்னை அருகே உள்ள மாங்காடுக்கு அருகே சிக்கராயபுரத்தில் மீனாட்சி பல்கலைக்கழகம் என்ற தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பி.இ., எம்.பி.ஏ., ஐ.டி. உள்ளிட்ட பாட பிரிவுகளில் சுமார் 1,500 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களிடையே கொந்தளிப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரும்பு கம்பிகள் மற்றும் கற்களால் வகுப்பறைகளின் கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். பின்னர் ஆய்வுக்கூடத்துக்கு சென்று அங்கும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.
அங்கு 2-வது ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத இடையூறு செய்கிறார்களே என கருதி முதலாம் ஆண்டு மாணவர்களை விரட்டியடித்தனர்.
இதனால் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் துரைபாண்டி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.