போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நக்சல் தலைவர் கிஷன்ஜி படுகாயம் -பலியானதாகவும் தகவல்
கொல்கத்தா: மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளாக தகவல்கள் கூறுகின்றன. அவர் ஒரு வேளை இறந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லால்கர் அருகே கிஷன்ஜி உள்ளிட்ட நக்சலைட் தலைவர்கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் கடும் தாக்குதலில் இறங்கினர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின் போது கிஷன்ஜி படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் இறந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு மிதினாப்பூர் மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோடீஸ்வரராவ் எனப்படும் கிஷன்ஜி மிகவும் மோசமான காயத்தை அடைந்திருப்பதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. லகான்பூர் கிராமத்திற்கு அருகே ஹதிஷோல் என்ற வனப்பகுதியில் இந்த சண்டை நடந்தது.
மொத்தம் 15 மாவோயிஸ்டுகள் இதில் கொல்லப்பட்டுள்ளனர். கிஷன்ஜியின் காலில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் இறந்து விட்டதாகக் கூட ஒரு செய்தி கிடைத்துள்ளது. இருப்பினும் இதுவரை எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றார்.
கிஷன்ஜி என மாவோயிஸ்டுகள் மத்தியில் அழைக்கப்படும் கோடீஸ்வரராவ், மாவோயிஸ்ட் அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினராகவும், மத்திய படைப் பிரிவின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்தான் கிழக்குப் பிராந்திய மாவோயிஸ்ட் பிரிவின் தலைமைப் பொறுப்பையும் வகித்து வருகிறார்.
இவரைக் குறி வைத்துத்தான் தற்போது பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.