கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் - குஷ்பு பேச்சை நியாயப்படுத்தும் சுப்ரீம் கோர்ட் கருத்து: மடாதிபதிகள் க
ஹைதராபாத்: குஷ்பு பேசிய பேச்சை நியாயப்படுத்தும் வகையில், ராதையையும், கிருஷ்ணரையும் இழிவுபடுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மேலும் பல மடாதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா ஸ்ரீபீடம் பூர்னானந்த சரஸ்வதி சுவாமி கூறுகையில், நீதிபதிகளின் தீர்ப்பு மீது யாரும் கருத்து கூற முடியாது. ஆனால் திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக் கொள்வது தவறல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது இந்து மதத்தை, இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. அத்துடன் கிருஷ்ணன்-ராதை உறவை மேற்கொள்காட்டியுள்ளனர். இதுவும் இந்து மதத்தை புண்படுத்தி இருக்கிறது. ராதா-கிருஷ்ணர் பற்றி முழுமையாக தெரிந்து பேச வேண்டும்.
இதுகுறித்து மாற்று கருத்தை கோர்ட்டு வெளியிட வேண்டும். இது பற்றி குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்றார்.
அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த குர்தாலம் பீடாதிபதி ஸ்ரீசித்தேஸ்வர ஆனந்த பாரதி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ராதா-கிருஷ்ணர் பற்றி கருத்து தெரிவித்து இருப்பது தவறு. திருமணம் செய்யாமல் வாழ்ந்தார்கள் என்று கூறுவது எங்களை காயப்படுத்துகிறது.
அவர்களுக்கிடையே என்ன உறவு இருந்தது என்பதை தெரிந்து கொள்ளாமல் மதத்தை காயப்படுத்தும் விதமாக சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்து இருப்பது வேதனை தருகிறது.
பிருந்தாவன சாஸ்திரப்படி ராதா-கிருஷ்ணர் ஆதி தம்பதிகள். இவர்கள் தான் சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை சிருஷ்டித்தார்கள். ராதாவுக்கு 11 வயதும், கிருஷ்ணருக்கு 8 வயதும் இருக்கும் போது காதல் இருந்தது. அவர்கள் அப்போதும் சேர்ந்து வாழ வில்லை என்று கூறினார்.