போர் முனையில் பிரபாகரன் - பொட்டுவை விரைவில் பார்க்கலாம்! - வைகோ
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது தளபதி பொட்டு அம்மானையும் விரைவில் போர்முனையில் பார்க்கலாம் என்றார் வைகோ.
பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
தமிழகத்திலே 7 1/2 கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையிலே லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே அரசு சுட்டுக் கொன்றதை இங்குள்ள தமிழர்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.
இலங்கை தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரி நான் பிரதமர் மன்மோகன்சிங்கை 16 முறை சந்தித்து முறையிட்டேன். இருந்தும் பயனில்லை. இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவி செய்தது. தமிழர்களை அழிக்க உறுதுணையாய் நின்றது.
இலங்கையிலே விடுதலைப் புலிகளின் இறுதிப்போர் ஓய்ந்து விட்டதாக ராஜபக்சே நினைக்கிறார். விரைவில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும். பிரபாகரனும், பொட்டுஅம்மானும் போர் முனையில் நிற்பார்கள். நீங்களும் அதை பார்க்கத்தான் போகிறீர்கள்.
ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலை தொடர்ந்தால் ஜன நாயகம் சீரழிந்து விடும். ஆட்சியின்மேல் அதிகாரிகள் மேல் நம்பிக்கை இழந்துவிடும் பிற்கால இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறி விடும் அபாய சூழ்நிலை உருவாகிவிடும்..." என்றார் வைகோ.
மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எழிலரசன், நகர செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.