விசா மோசடி: முன்னாள் அமைச்சரின் மகனுக்கு போலீஸ் வலை!
கடையநல்லூர்: கடையநல்லூரில் வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா விசா வழங்கி வாலிபரிடம் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மகன் உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், மாவடிக்கால் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் நாகராஜன்.
இவர் கடந்த 2005ம் ஆண்டு வெளிநாடு செல்வதற்கு கடையநல்லூரில் டிரவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த, மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.ஏ.மஜீதின் மகன் பசூருதின், நிறுவன பங்குதாரர் இப்ராஹூம் ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தார்.
தென்ஆப்பிரிக்கா செல்தவற்காக அவர்கள் நாகராஜனிடம் விசா கொடுத்தனர். அதன் மூலம் நாகராஜன் வேலைக்காக தென் ஆப்பிரிக்கா சென்றார்.
ஆனால் அங்கு சென்ற பிறகு, பசூருதின் சுற்றுலா விசா கொடுத்து தன்னை ஏமாற்றிய விபரம் தெரிய வந்தது. இதையடுத்து பல சிரமங்களை சந்தித்து நாகராஜன் மீண்டும் கடையநல்லூர் திரும்பினார்.
சுற்றுலா விசா கொடுத்து தன்னை ஏமாற்றிய பசூருதின், இப்ராஹூம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி கடையநல்லூர் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.