For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 கட்டமாக 10 மணி நேரம் நரேந்திர மோடியை விசாரித்த எஸ்ஐடி

By Staff
Google Oneindia Tamil News

காந்தி நகர்: குஜராத் குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியை நேற்று 2 கட்டமாக மொத்தம் 10 மணி நேரம் விசாரித்தது எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு.

2002ம் ஆண்டு நடந்த குல்பர்க் சொசைட்டி படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள எஸ்ஐடி, விசாரணைக்காக நேரில் வருமாறு முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

அதை ஏற்று நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார் மோடி. 2 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணை நேற்று முற்பகலில் தொடங்கியது. காந்திநகர், பழைய தலைமைச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்ஐடி அலுவலகத்திற்கு அவர் நேரில் வந்து விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த விசாரணை கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் நீடித்தது. மோடியிடம் கேட்பதற்காக 68 கேள்விகளை எஸ்ஐடி தயாரித்து வைத்திருந்தது. அதில், முதல் கட்ட விசாரணையின்போது 62 கேள்விகளை மோடியிடம் எஸ்.ஐடி கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் பதிலளித்தார்.

இந்த கேள்விகள் அனைத்தும் குல்பர்க் சொசைட்டி சம்பவம் தொடர்பானவை என்று தெரிகிறது. குல்பர்க் சொசைட்டி படுகொலையில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்பட 68 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

முதல் கட்டண விசாரணைக்குப் பின்னர் மீண்டும் இரவு 9 மணிக்கு 2வது கட்ட விசாரணைக்கு மோடி ஆஜரானார். அப்போது மீதமிருந்த 6 கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். இந்தக் கேள்விகள் குஜராத் கலவரக்காரர்களை அடக்கிய விதம் குறித்ததாகும்.

குஜராத்தில் 2002ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அந்த சம்பவத்திற்குப் பின்னர் மோடியிடம் விசாரணை நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

எஸ்ஐடி தலைவர் ஏ.கே.ராகவன் நேற்றைய விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. மாறாக குழுவின் மூத்த உறுப்பினரான முன்னாள் சிபிஐ டிஐஜி ஏ.கே.மல்ஹோத்ராதான் மோடியை நேற்று விசாரித்தார்.

முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர் வெளியில் வந்த மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மார்ச் 27ம் தேதி விசாரணைக்கு வருமாறு எனக்கு எஸ்ஐடி சம்மன் அனுப்பியிருந்தது. அதை ஏற்று நான் வந்துள்ளேன். இந்திய சட்டம் அனைவரையும் விட மேலானது. சாதாரண மக்களோ அல்லது முதல்வரோ யாருமே சட்டத்திற்குக் கீழ்தான். அதை ஏற்று நான் இங்கு வந்துள்ளேன்.

இதன் மூலம் ஒரு சிறந்த உதாரணத்தை நான் படைத்துள்ளேன். என்னை விமர்சித்துப் பேசி வந்தவர்களின் வாயையும் அடைத்துள்ளேன்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவான இதில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூட இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்றார் மோடி.

2வது கட்ட விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, உங்களது வேலை முடிந்து விட்டது என்று எஸ்ஐடி கூறியுள்ளது. எனவே இனி விசாரணை இருக்காது என நினைக்கிறேன்.

என்னிடம் எஸ்ஐடி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன். நான் அளித்த பதில்களைப் பெற்றுக் கொண்டு அதில் கையெழுத்திடுமாறு கோரினர். நானும் போட்டுக் கொடுத்தேன். இனி இதுகுறித்து முடிவு செய்ய வேண்டியது சுப்ரீம் கோர்ட்தான் என்றார் மோடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X