மாமல்லபுரம் அருகே கோரம்- டீக்கடையில் வேன் மோதி 4 பேர் பலி
மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், டீக்கடையில் வேன் ஒன்று பயங்கரமாக மோதியதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மாமல்லபுரத்தை அடுத்த தேவனேரி அருகே உள்ள இளந்தோப்பு என்ற இடத்தில் இன்று அதிகாலை ராஜகோபால் (60), அவரது மனைவி கோவிந்தம்மாள் (52), மதுரை (50), அகல்யா (2) ஆகியோர் சாலையோரம் இருந்த டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்.
ராஜகோபால், கோவிந்தம்மாள், மதுரை ஆகியோர் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். டீ குடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருந்தபோது, சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடி டீக்கடைக்குள் பாய்ந்தது.
இதில் ராஜகோபால், கோவிந்தம்மாள், அகல்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மதுரையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான வேன் நடு ரோட்டில் கவிழ்ந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.