நிலவள வங்கியின் ஜப்தி நோட்டீஸ் - அதிர்ச்சியில் நெசவாளர்கள்
அரக்கோணம்: அரக்கோணம் நிலவள வங்கியில் கடன் பெற்ற விசைத்தறி தொழில் நெசவாளர்களின் வீடுகளை ஜப்தி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இன்னும் ஏழு தினங்களுக்குள் கடனை கட்டவில்லை எனில் வீடு ஜப்தி செய்யப்படும் என கடன் பெற்ற அனைவருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்தியைத் தடுக்க போராட்டம் நடத்தவும் நெசவாளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
அரக்கோணம் நிலவள வங்கியில் பன்ணை சாரா கடன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அரக்கோணத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடனுக்கு விசைத்தறிகள் வழங்கப்பட்டன.
சில ஆண்டுகள் கடன் தவணைகளைச் செலுத்தி வந்தனர் நெசவாளர்கள்.
ஆனால் இப்போது நெசவுத் தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆர்டர்கள் இல்லாத நிலையில் இந்த பாக்கிகளை தொடர்ந்து செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர் நெசவாளர்கள்.
இந்த கடன்களுக்கு 6 சத நேர்வட்டி தள்ளுபடி அளித்தால், அசலை உடனே கட்டத் தயாராக இருப்பதாகவும் தமிழக அரசுக்கு நெசவாளர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் இச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் அரக்கோணம் நிலவளவங்கி அதிகாரிகள் கடன் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் இன்னும் ஏழு தினங்களுக்குள் கடன்பாக்கி முழுவதையும் செலுத்தவில்லை எனில் வீடுகள் ஜப்தி செய்யப்படும் என குறிப்பிட்டு நோட்டீசு அளித்து வருகின்றனர். இதனால் நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடனில் வட்டி தள்ளுபடி அளித்தால் கடனை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக அரசுக்கு தெரிவித்து அரசு அதுகுறித்த முடிவை பரிசீலனை செய்து வருகையில் நிலவளவங்கி அதிகாரிகள் ஜப்தி செய்வோம் என மிரட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என நெசவாளர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
விரைவில் இதைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்றும் அவை அறிவித்துள்ளன.