திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் கண்காணிப்பு கேமராக்கள்: போலீஸ் உத்தரவு
புதிய தலைமைச் செயலகம் அமைந்த பிறகு அப்பகுதியை சுற்றியுள்ள மேன்ஷன்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் சென்னைக்கு வேலைத் தேடி வரும் இளைஞர்களின் புகலிடமாக விளங்குவது இந்த மேன்ஷன்கள். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதியில் சுமார் 1000 மேன்ஷன்களுக்கு மேல் உள்ளன.
இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைந்த பிறகு இந்தப் பகுதிகளில் உள்ள மேன்ஷன்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலாக்கப்பட்டு வருகின்றன. ரகசிய போலீசார் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விடுதிகளில் இந்த மேன்ஷன்களில் வரும் 3 மாதத்துக்குள் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மேன்ஷன் உரிமையாளர்களுக்கு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
விடுதிகளுக்கு புதிதாக வருவோர் பற்றிய விவரங்களை உடனே காவல் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும், தங்குவோரின் அடையாள அட்டை நகல், சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை வாங்கி வைக்க வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கேமரா பொறுத்துவது உள்ளிட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அமலாக்க மேன்ஷன் உரிமையாளர்கள் வாடகையை அதிகரிக்கப் போவது என்னவோ நிச்சயம்.