ரஷ்யாவில் மெட்ரோ ரயில்களில் குண்டுவெடிப்பு-50 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மெட்ரோ ரயிலிலும் ரயில் நிலையத்திலும் இன்று நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 50 பேர் வரை பலியாகியுள்ளனர்.
ரஷ்யாவில் செசன்யா தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை மாஸ்கோவின் மெட்ரோ ரயிலிலும் ரயில் நிலையத்திலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 40 பேர் பலியாயினர்.
மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.
முதல் குண்டுவெடிப்பு மத்திய மாஸ்கோவில் உள்ள லுபியன்கா ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலிலும் நடந்தது. இதில் ரயிலில் இருந்த 14 பேரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்த 11 பேரும் பலியாயினர். மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் பார்க் குல்டுரி மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இதில் 15 பேர் வரை பலியாகிவிட்டனர். இதிலும் பலர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புகள் தற்கொலைத் தாக்குதல் மூலம் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் பலியாகிவிட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா கண்டனம்:
இந்த மாஸ்கோ குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாஸ்கோ குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. இது மிகவும் சோகமான மற்றும் கொடூரமான சம்பவமாகும். இந்திய அரசின் சார்பாகவும் மக்களின் சார்பாகவும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறை மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் ரஷ்யாவுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.