மதுரை திருமங்கலம் இளைஞர் காங். தேர்தலில் வன்முறை - அரிவாள் வெட்டு
மதுரை: மதுரை அருகே திருமஙகலத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தொகுதிப் பிரதிநிதி தேர்தலில் பெரும் வன்முறை மூண்டது. இதில் முன்னாள் கவுன்சிலர் அரிவாளால் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து வருகிறது. இதில் தற்போது முக்கிய தேர்தலாக, தொகுதிப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நடந்து வருகிறது.
திராவிடக் கட்சிகள் சட்டச்சபை, லோக்சபா தேர்தலின்போது எப்படி செயல்படுவார்களோ அதேபோல, இந்த தொகுதிப் பிரதிநிதிகள் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கோஷ்டிகளும் தங்களது ஆதரவாளர்கள் வெற்றி பெறுவதற்காக பெரும் தள்ளுமுள்ளில் இறங்கியுள்ளனர்.
தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அது அரிவாள் வெட்டு என்று அடுத்த கட்டத்திற்குத் தாவியுள்ளது.
மதுரை திருமங்கலம் தொகுதிப் பிரதிநிதியைத் தேர்வு செய்ய அங்கு தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டபோது அதை ஏற்காத ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் மோதலில் இறங்கினர்.
இரு தரப்பினருக்கு இடையே நடந்த பயங்கர மோதல் நடந்தது. அப்போது முன்னாள் கவுன்சிலரான சரவணப்பாண்டியன் என்பவரை ஒரு பிரிவினர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சமீபத்தில்தான் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இதுபோன்று ஆயுதங்களால் இரு தரப்பினர் தாக்கிக் கொண்டு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.