தமிழகத்துக்கு குழாய் மூலம் கோதாவரி எரிவாயு-தயாநிதி
இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல ஆண்டு கூட்டம் மற்றும் கருத்தரங்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் வேணு சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்றுப் பேசியதாவது:
தொழில் துறையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தபோது பின்பற்றப்பட்ட தொழில் கொள்கைகள் இப்போது மேலும் தளர்த்தப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் உருவானார்கள். இந்திய தொழில் துறையின் தனியார் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
எந்த மாநிலத்தில் உற்பத்தி தளம் சிறப்பாக இருக்கிறதோ அங்கு தொழில் வளம் மேலும் பெருகி முதலீடுகள் குவியும். தமிழகத்தில் சிறப்பான உற்பத்தி தளம் இருப்பதால் முதலீடுகள் குவிகின்றன.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அவ்வளவாக இல்லை!
மின்சார தட்டுப்பாடு குறித்து இங்கே கூறினார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் நிலைமை நன்றாகவே உள்ளது.
மின் தட்டுப்பாட்டை போக்க துணை முதல்வரும், நானும் தொழில் அதிபர்களை அழைத்து பேசினோம். மின்சாரத்தை வெளியில் வாங்க அவர்களுக்கு அனுமதி அளித்தோம். மின் உற்பத்தி திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மின் உற்பத்தி திட்டங்களில் தொழில் அதிபர்கள் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
குழாய் மூலம் கோதாவரி எரிவாயு
தமிழகத்தின் மின்சார தேவையை சமாளிக்க கோதாவரி படுகையில் இருந்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
தண்ணீர் பிரச்சினையை போக்க நதிகளை இணைக்க வேண்டும் என்பது நம் முதல்வரின் கனவாகும். எனவே, அந்த திட்டத்துக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்..." என்றார் தயாநிதி மாறன்.