லாரி ஸ்ட்ரைக்கைத் தவிர்க்க கடைசி கட்ட பேச்சுவார்த்தை!
சென்னை: லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகள் தொடர்பான கடைசி கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை முறிந்துவிட்டால், ஏப்ரல் 5-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர் லாரி உரிமையாளர்கள்.
இந்த ஸ்டிரைக்கில் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளதால், எப்படியாவது இந்த ஸ்ட்ரைக்கை தடுப்பதில் முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம். பொன்னம்பலம், செயலாளர் என்.ஆர். கார்த்திக் ஆகியோர் இந்த ஸ்ட்ரைக் மற்றும் நடக்கும் பேச்சுவார்த்தை பற்றிக் கூறியது:
ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் தேசிய அனுமதி, இறக்குமதி டயர்களுக்கு வரிகள் ரத்து, டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 5-ம் தேதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து லாரி உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இப் பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படுவில்லையெனில் ஏப்ரல் 5-ம் தேதி முதல் கேஸ் டேங்கர் லாரிகளும் நிறுத்தி வைக்கப்படும்.
தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 4 ஆயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்தம் துவங்கினால் சேவைகள் முழுமையாகப் பாதிக்கப்படும்," என்றனர்.