தேர்தலில் முதலீடு செய்யும் அரசியல் வியாபாரிகள் - ஜவாஹிருல்லா வேதனை
சேலம்: இன்றை கால கட்டத்தில் தேர்தல், முதலீடு செய்யும் தொழிலாக மாறி விட்டது. வியாபாரிகள் முதலீடு செய்வது போல் அரசியல் கட்சியினர் தேர்தலில் முதலீடு செய்கின்றனர். வெற்றி பெற்ற பின்பு, அதற்கான அறுவடை செய்யும் நிலை இன்று உள்ளது என, மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மனித நேய மக்கள் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்று முறையான அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறது.
இன்றை கால கட்டத்தில் தேர்தல், முதலீடு செய்யும் தொழிலாக மாறிவிட்டது. வியாபாரிகள் முதலீடு செய்வது போல் அரசியல் கட்சியினர் தேர்தலில் முதலீடு செய்கின்றனர். வெற்றி பெற்ற பின்பு, அதற்கான அறுவடை செய்யும் நிலை இன்று உள்ளது.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் சிறுதொழில் நிறுவனங்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மின்தடையை அரசு உடனே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அஞ்சு குப்தா, நீதிமன்றத்தில் ஆஜராகி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியின் பங்கு குறித்து விளக்கம் அளித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
லிபரான் கமிஷன், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 68 பேர் குற்றவாளி என, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின்படி புதிதாக குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
மத்திய அரசு, வகுப்புவாத கலவர தடுப்புச் சட்டத்தின் மசோதாவை தாக்கல் செய்யும் முன்பு, சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை கழகத்தின் ஆலோசனையைப் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.
சிறுபான்மையினருக்கு மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ரங்கநாத மிஸ்ரா அறிக்கையின் பரிந்துரையை மத்திய அரசு உடனே நிறைவேற்ற முன்வரே வேண்டும். இதை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.