இலங்கை திரும்பிய ஈபிஆர்எல்எப் தலைவர் வரதராஜ பெருமாள்!
1990ம் ஆண்டு மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் உதவியோடும், இந்திய அமைதி காக்கும் படையின் பாதுகாப்போடும் வட-கிழக்கு மாகாண முதல்வராக நியமிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.
இலங்கையில் தனி ஈழம் வேண்டி ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய பல குழுக்களின் தலைவர்களில் ஒருவரான இவர், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை நடத்தி வந்தார்.
ஆனால், விடுதலைப் புலிகளின் கை ஓங்கியதால் வரதராஜ பெருமாளும் அவரது ஆதரவாளர்களும் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.
1989ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை என்ற இலங்கை சென்று புலிகளை ஒடுக்க முயன்றபோது அவர்களுடன் கைகோர்த்தார் வரதராஜ பெருமாள்.
இதையடுத்து அவரை வட-கிழக்கு மாகாண முதல்வராக்கினார் ராஜிவ் காந்தி. 1988ம் ஆண்டு டிசம்பர் முதல் 1990ம் ஆண்டு மார்ச் வரை இவர் 'பொம்மை' முதல்வராக இருந்தார்.
ஆனால், 1990ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் படை நாடு திரும்பியபோது வரதராஜ பெருமாள் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
ரா-ஐ.பி பாதுகாப்புடன் இந்தியாவில் ரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டார். சில காலம் டெல்லியிலும் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓரிடத்திலும் பலத்த பாதுகாப்புடன் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
2000ம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற இவர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால், அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதால் மீண்டும் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் மீண்டும் இந்தியாவுக்கே வந்துவிட்டார்.
இப்போத விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் இலங்கை திரும்பியுள்ளார்.
நேற்று இந்த ரகசிய பயணத்தை அவர் மேற்கொண்டார். இலங்கையில் தமிழர் பகுதிகளில் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வரதராஜ பெருமாள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெருமாளின் கட்சி வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.