தமிழக அரசுக்கு கடன் எவ்வளவு? - சட்டசபை கூட்டத் தொடரில் வெளியிட தா.பா. கோரிக்கை
ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில்,
தமிழகத்தில் மின்பற்றா குறை காரணமாக சிறு, குறு, தொழில் மட்டும் இன்றி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு இருக்கும் கடன் விபரங்கள் எவ்வளவு என்பது குறித்து சட்டசபை கூட்டத் தொடரில் விளக்க அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் இலவச அரிசி, மணல், இலவச டிவி போன்றவைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2009 ல் இந்திய அளவில் தமிழகத்தில் தான் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு 35 பேர் வீதம் உயிரிழந்துள்ளனர்.
அதே போன்று ஆள் கடத்தல், கொலை சம்பவங்களும் அதிரித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் 85, திருநெல்வேலியில் 72, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூரில் 70 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து, தமிழக அரசு விரிவான அறிக்கை வெளியிட வேண்டும்.
விலைவாசி உயர்வை கண்டித்து தேசிய அளவில் ஏப்ரல் 8 ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்க தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தமிழக சட்டசபை திறப்பு விழாவில், தி.மு.க.தலைமையின் ஆலோசனைப்படி தான், மத்திய அரசு செயல்படுவதாக பிரதமர் தெரிவித்தார். அப்படியானால், போரின் போது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு அளித்து வந்த மத்திய அரசின் உதவிகளும் தி.மு.க. ஆலோசனையின் பேரில் செய்யப்பட்டவையா என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்றார்.