தேசிய ஆலோசனை குழு தலைவராக மீண்டும் சோனியா
டெல்லி: தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மீண்டும் நியமித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
எம்பியாக இருந்து கொண்டே ஆதாயம் தரும் இந்தப் பதவியையும் வகித்த சர்ச்சை காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இப் பதவியில் இருந்து சோனியா விலகினார்.
மேலும் தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தனது ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இந் நிலையில் மீண்டும் இப்போது தேசிய ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைப் பெறுகிறார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
தேசிய ஆலோசனைக் குழுவின் பிற உறுப்பினர்கள் கோரியபடி சோனியா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓராண்டுக்கு இப்பதவியை வகிப்பார். குழு உறுப்பினர்கள் விரும்பினால் தலைவரின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும்.
இந்தப் பதவியை அவர் வகித்தாலும் இதற்கான அலவன்ஸ் உள்ளிட்ட பயன்களை அவர் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தை செயல்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கியப் பணியாகும்.
முதல்வர் வாழ்த்து:
தேசிய ஆலாசனைக் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் பதவியில் தங்களின் சிறப்பான சேவை மூலம் நாடு அதிலும் குறிப்பாக ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் நன்கு பயனடைவார்கள். இந்த நியமனத்தின் மூலம் இந்த பதவிக்கு புதிய பரிமாணங்கள் கிடைக்கும். தங்களுடைய சேவை மனப்பான்மைக்கு இந்த நியமனம் மேலும் ஒரு சிறப்பாக அமையும்.
தங்களுக்கு இந்த பதவி மகிழ்வாகவும், பயனுள்ளதாகவும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.