குஜராத் கலவரத்தை கண்டிப்பாரா அமிதாப்-காங். கேள்வி
டெல்லி: குஜராத்தில் நடந்த கலவரத்தை அமிதாப் பச்சன் கண்டிப்பாரா. அப்படி கண்டித்து விட்டு அவரால் குஜராத் மாநில பிராண்ட் அம்பாசடராகவும் நீடிக்க முடியுமா என்று கேட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
குஜராத் மாநில அரசின் நல்லெண்ண தூதராக அமிதாப் உள்ளார்.
இந் நிலையில் மும்பையில் நடந்த கடல் பாலத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போக அமிதாப் பச்சனை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த பூமி நேர நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை டெல்லி மாநில காங்கிரஸ் அரசு புறக்கணித்தது. இதுவும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அமிதாப் பச்சனை காங்கிரஸ் கட்சி நடத்தும் விதம் மிக மோசமாக உள்ளதாக சிவசேனா, பாஜக ஆகியவை விமர்சித்துள்ளன.
தலிபான்களைப் போல காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்வதாக நரேந்திர மோடியும் கூறியிருந்தார்.
இதைக் கண்டித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில்,
2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக அமி தாப்பச்சன் என்ன சொல்கிறார் என்பதை அறிய விரும்புகிறோம்.
குஜராத் கலவரத்தின் போது முதல்வர் நரேந்திர மோடி நடந்து கொண்டது சரியா? சரி இல்லையா? இதை அமிதாப் தெளிவுபட சொல்ல வேண்டும். அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதையும், போலீசார் போலி என்கவுண்டர் நடத்தி பலரை கொன்றதையும் பற்றி அவர் என்ன சொல்கிறார்.
இந்த கொடூர செயல்கள் நடந்த மாநிலத்துக்கு அமிதாப் நல்லெண்ண தூதராக இருக்கிறாரா? அது சரிதான் என்பதை அவர் ஒத்துக்கொள்கிறாரா?.
டெல்லியில் நடந்த விழாவில் அபிஷேக் பச்சன் போஸ்டர் அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் காரணம் கிடையாது. அது தனியார் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி. காங்கிரசுக்கோ, மாநில அரசுக்கோ இதில் சம்பந்தம் இல்லை என்றார்
மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், நரேந்திர மோடி தன்னிடம் சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணை காரணமாக விரக்தியில் உளறுகிறார் என்று தெரிவித்தார்.