விடுதலைப் புலிகளிடம் பறிமுதல் செய்த தங்கம் வங்கியில் உள்ளது-இலங்கை அரசு
இலங்கையில் கடந்த ஆண்டு போருக்கு பின்னர் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான, ஏராளமான பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட சொத்தை இலங்கை அரசு முறையாக கணக்கில் கொண்டுவரவில்லை என்றும் பலரும் இதில் முறைகேட்டு செய்துள்ளனர் என்றும் இலங்கையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
எதிர்க்கட்சி தலைமை கொறடா ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பினார்.
மேலும், விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார செயலாளர் குமரன் பத்மநாபனிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரம் மற்றும் அவர் தெரிவித்த தகவல்களை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மற்ற எதிர்க்கட்சிகளும், இவ்விவகாரத்தில் இலங்கை அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தின.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் உள்ளிட்டவை வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால், எந்த வங்கியில், எவ்வளவு மதிப்பிலான சொத்துக்கள் போன்ற தகவல்களை தெரிவிக்கவில்லை. பல்வேறு வங்கிகளில் உரிய கணக்குகளோடு அவை 'டெபாசிட்' செய்யப்பட்டுள்ளது என்று அதிபரின் மூத்த ஆலோசகர் பாசில் ராஜபக்சே தெரிவித்தார்.
கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த முக்கிய ஆவணங்களையும் தங்கம், பணம் உள்ளிட்டவற்றையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
ஆனால் இந்தப் பணம், தங்கம் குறித்து இலங்கை அரசு தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டதை இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.