அதிமுக தோல்விக்கு கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்: தா.பாண்டியன்
திண்டுக்கல்: பென்னாகரம் தேர்தலின் போது, கூட்டணி ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடுகளின் காரணமாகவே அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மொத்தம் 2 லட்சத்து ஆயிரத்து 8 ஓட்டுகள் கொண்ட பென்னாகரம் சட்டசபைத் தொகுதிக்கு நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் அதிமுக 28,784 ஓட்டுகள் மட்டுமே பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.
டெபாசிட் இழக்கும் அளவுக்கு அதிமுக தோல்வியை தழுவியது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் திண்டுக்கல்லில் நிருபர்களை சந்தித்தபோது தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், 'பென்னாகரம் தேர்தல் முடிவு அதிர்ச்சியையோ, ஆச்சர்யத்தையோ ஏற்படுத்தவில்லை. அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றதற்கு, கூட்டணியில் நிலவும் சில குறைபாடுகளே காரணம்.
விரைவில் அவற்றை முழுமையாக களைய நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்பதற்கு ஜோதிடம் சொல்ல முடியாது.
காங்கிரசில் பாரம்பரியம் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், தமிழக கூட்டணியில் மாற்றம் வரும். கூட்டுக்கொள்ளை அடிப்பதை தொடர விரும்பினால், மாற்றத்திற்கு வாய்ப்பில்லை.
தமிழகத்தில் வறட்சியால் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், அதிக மின்வெட்டு மக்கள் மீது பேரிடியாக விழுந்துள்ளது. பஞ்சாலைகளில் ஒரு கிலோ நூல் உற்பத்திக்கான செலவினம் ஏழு ரூபாய் அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக மில்கள் மூடல், ஆட்குறைப்பு போன்றவை அதிகரிக்கும். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்.