வெளியுறவுத்துறை பரிந்துரையை ஏற்று யுஎஸ் பயணத்தை ரத்து செய்த மொய்லி, கே.ஜி.பாலகிருஷ்ணன்
டெல்லி: அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகும் கூறியதை ஏற்று தற்போது அந்தப் பயணத்தை ரத்து செய்து விட்டனர் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், அட்டர்னி ஜெனரல் வாஹனாவதி ஆகியோர்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக் கழகத்தில் மூன்றுநாள் சட்ட கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் சட்ட அமைச்சர், தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரல் ஆகியோர் பங்கேற்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு வெளியுறவு அமைச்சகம், இந்த கருத்தரங்கு மூன்று பேர் பங்கேற்கும் அளவுக்கு முக்கியமானதாக இல்லை. எனவே இதில் பங்கேற்கத் தேவையில்லை. பங்கேற்க விரும்பினால், சொந்த விருப்பத்தின் பேரில் இதில் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருந்தது.
இது தொடர்பான கடிதத்தை வெளியுறவு அமைச்சக செயலர் விவேக் கட்ஜு, நீதித்துறை செயலர் பூபிந்தர் பிரசாத்துக்கு அனுப்பியிருந்தார். இருப்பினும் மூவரும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அந்தப் பயணத்தை அவர்கள் மூன்று பேரும் ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.