திமுக தலைவர் யார் என்பதை தனி நபர் எவரும் தீர்மானிக்க முடியாது - கருணாநிதி
சமீபத்தில் முதல்வர் கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரி, பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எனக்கு கருணாநிதி மட்டும்தான் தலைவர். அவருக்குப் பின் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன். கருணாநிதியின் இடத்தை வகிக்க திமுகவில் யாருக்கும் தகுதி கிடையாது என்று கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் முன் அழகிரி இவ்வாறு கூறிவிட்டுக் கிளம்பிப் போனார்.
இதனால் திமுகவில் வாரிசுப் போர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் பேட்டி வெளியான அன்றே செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, அதை அவரிடமே கேளுங்கள் என்று பதிலளித்தார்.
இந் நிலையில் தற்போது விரிவாக பதிலளித்துள்ளார் கருணாநிதி. இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுகவின் தலைவரை ஒரு தனி மனிதர் தீர்மானித்து விட முடியாது. எனக்கு கூட அந்த அதிகாரம் கிடையாது. கட்சி மட்டுமே தலைவர் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.
அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே எந்தவிதமான விரிசலும் இல்லை. அப்படி இருந்தால் அது என்னை பாதிக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.