காலாவதி மருந்து வழக்கு - முக்கியப் புள்ளியான சஞ்சய்குமாரைத் தேடி ராஜஸ்தானில் போலீஸ் வேட்டை
சென்னை: காலாவதியான மருந்து விற்பனை விவகாரத்தில் முக்கியப் புள்ளியான சஞ்சய் குமார் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் சஞ்சய்குமாரின் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர்.
மும்பையில் உள்ள சஞ்சய்குமாரின் உறவினர் வீடுகளிலும் வேட்டை நடத்தப்பட்டது.
சென்னையில் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த பெரும் சம்பவத்தில் முக்கியப் புள்ளியாக கருதப்படுகிறார் சஞ்சய்குமார். மார்வாடியான அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடிப் பிடிக்கும் பணியில் தனிப்படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எழும்பூரில் உள்ள சஞ்சய்குமாரின் மருந்து குடோனை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
கொடுங்கையூர் குப்பை சேகரிக்கும் வளாகத்தில் கொட்டுவதற்கு எடுத்து வந்த டிரைவர் வெங்கடேசன் அதை அங்கு கொட்டாமல் ரவி என்பவரிடம் கொடுத்து பணம் வாங்கிக் கொண்டார். அந்த காலாவதியான மருந்துகள் அனைத்தும் டிரைவர் ஜான்பாஷா மூலமாக சஞ்சய்குமாருக்கு தான் அனுப்பப்பட்டது.
சஞ்சய்குமார்தான் அதை மீனாட்சி சுந்தரம் மற்றும் வேறு சிலருக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ளார். எனவே மிகவும் முக்கிய நபரான இவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடித்தால் தான் மேலும் விவரங்கள் தெரியவரும். தற்போது தனிப்படை போலீசார் சஞ்சய் குமாரை தேடி மும்பை மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாலி ஆகிய ஊர்களுக்கு சென்று உள்ளனர்.
மும்பையில் தானே பகுதியில் சஞ்சய் குமாரின் உறவினர் வீடு உள்ளது. அவரது வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லை. அங்கிருந்து தப்பிவிட்டார். ராஜஸ்தான் மாநிலம் பாலியில் அவரது உறவினர் வீடு உள்ளது.
ராஜஸ்தான் அவரது சொந்த மாநிலமாகும். அதனால் அங்கு அவர் பதுங்கி இருக்கக்கூடும் என்று தனிப்படை போலீசார் பாலியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கும் இல்லை. இதுவரை சஞ்சய்குமார் சிக்கவில்லை.
சஞ்சய்குமார், பாஸ்கர் ஆகிய இருவரும் பிடிபட்டால் வழக்கில் திருப்பம் ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.