அடையாள அட்டைக்கு கருவிழி படம்: நிலகேனி யோசனைக்கு கேபினட் செயலர் கடும் எதிர்ப்பு
நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்த இன்போஸிஸ் நிறுவனர்களுள் ஒருவரான நந்தன் நிலகேனி தலைமையில் தனி அலுவலகமே இயங்குகிறது.
இந்த அட்டையில் ஒருவரை அடையாளம் மூன்று வழிகளை நந்தன் நிலகேனி பரிந்துரைத்துள்ளார்.
கைரேகை, முகம் ஆகியவற்றுடன், ஒருவரது கருவிழியின் படத்தையும் எடுத்து அடையாளத்துக்கு வைக்கலாம் என்று அவர் பிரதமருக்கு பரிந்துரைத்துள்ளார். கருவிழியைப் படமெடுத்து அடையாள அட்டையில் பதிந்து, அதை டேட்டா பேஸிலும் வைத்துக் கொள்வது நந்தனின் திட்டம். இது உயர்ந்த தொழில் நுட்பம், எளிதில் ஏமாற்ற முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த படத்தை எடுக்கும் பணியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுதான் செய்ய முடியும் என்றும் அவர் சிபாரிசு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இந்த யோசனையை மத்திய அரசின் கேபினட் செயலர் எம் சந்திரசேகரன் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அடையாள அட்டைக்கு கைரேகை, முகம் ஆகியவற்றின் படங்களே போதும். கருவிழியைப் படமெடுப்பதெல்லாம் பயனற்ற வெட்டிச் செலவு. இதற்காக ஏதோ ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட பணத்தை நாம் செலவழிக்க வேண்டி வரும்.
இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையும், செலவினங்கள் துறையும் கூட முகம் மற்றும் கைரேகை படங்களே போதுமானவை என பரிந்துரைத்துள்ளது" என்றார்.